Skip to main content

கிறிஸ்மஸ் மரத்தின் மறுபக்கம்

 



கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின்போது விருந்தினராகவும், அலங்காரமாகவும் நுழையும் கிறிஸ்மஸ் மரம் குறித்த கேள்வி இன்றும் கிறிஸ்தவர்களிடையே தொற்றிக்கொண்டே நிற்கிறது. இயேசுவின் காலத்திலும், அப்போஸ்தலரின் காலத்திலும், தொடர்ந்து சுவிசேஷத்தை அறிவித்து வந்த சீஷர்களின் காலத்திலும் இல்லாத மரம் திடீரென திசையெங்கும் பரவியது எப்படி? 

பசுமை, பரிசு, பகட்டு, பிரகாசம் இவைகளையே பிரதானப்படுத்தி, ஒளியின் வேஷம் தரித்து ஊடுருவி நிற்கும் இதனை அடையாளம் கண்டுகொண்டு அகற்றுவது நம் பொறுப்பே. கிறிஸ்மஸ் மரம் இல்லையேல் கிறிஸ்மஸ் இல்லை எனுமளவிற்கு கிறிஸ்துவின் பிறப்பைக் காட்டிலும் சிறப்பு பெற்றுவரும் இதற்கு மறுப்பு தெரிவிப்பவர்களாக மாறவேண்டியதும், வியாபாரத்திலும் களைகட்டிவரும் இக்களையினை களைந்து எறிவதும் இன்றைய அவசியம். தெமேத்திரியும் என்னும் பேர்கொண்ட ஒரு தட்டான் தியானாளின் கோவிலைப் போல் வெள்ளியினால் சிறிய கோவில்களைச் செய்து, தொளிலாளிகளுக்கு மிகுந்த ஆதாயம் வருவித்துக்கொண்டிருந்ததைப் போல (அப். 19:24), கிறிஸ்மஸ் மரத்தினால் ஆதாயம் தேடிக்கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். மற்றொரு கூட்டம் குழந்தை, மரியாள், தேவ தூதர்கள், மாட்டுத் தொழுவம், சாஸ்திரிகள், மேய்ப்பர்கள் போன்ற சிற்பங்களைச் செய்து அவைகளை ஜோடித்து, அலங்காரமான வண்ணமயமான விளக்குகளின் வெளிச்சத்தில் வைத்து இருளின் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது. 

இந்தத் தொழிலினால் 'நல்ல பிழைப்பு' உண்டாயிருக்கிறது என்பதினாலேயே (அப். 19:25) 'தியானாளே பெரியவள்' என்று அவர்கள் சத்தமிடுவதற்கான (அப். 19:28) காரணம். பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் (யோவா 2:16) என்பது இயேசுவின் போதனை, கோவில்களையே செய்து வியாபாரமாக்கிவிடுவது பிசாசின் போதனை. இத்தகைய வழக்கத்தினை இன்றும் பிற மதத்தினரிடம் வாகனங்களிலும், வீடுகளிலும் நாம் காணமுடிகிறதல்லவா. எத்தனையோ பேருடைய தொழில் பாதிக்கப்பட்டுவிடும் என்பதற்காக சத்தியத்திற்கு எதிராகச் சத்தமிடுவோர் சத்துருவின் கூட்டத்தில் உள்ளவர்களே. சத்தியம் முடக்கப்படவேண்டும் என்பதற்காக சத்துரு அநேகரை அத்தொழிலில் முதலீடு செய்யப்பண்ணுகிறான்; என்றாலும், அவைகளின் ஒன்றும் இயேசுவுக்கு ஈடாகிவிடாது. இயேசுவின் பிறப்பு சுவிசேஷமாகச் சொல்லப்படவேண்டும்; அதைத் தடுக்கும் சத்துருவின் திட்டங்கள் வெல்லப்படவேண்டும், வேஷமானவைகளினின்று நாம் வெளியேறவேண்டும். புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள் (எரே 10:2) என்பதே கர்த்தரால் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பிரதான சட்டம்; இச்சட்டம் நியாயத்தீர்ப்பில் நம்மை கைதியாக்கிவிடக்கூடும். 

பலத்த வேட்டைக்காரனாயிருந்த நிம்ரோத் (ஆதி. 10:9) காட்டில் மரித்தபோது, அவனது தாயும் மற்றும் மனைவியுமான சிமிராமிஸ், அவனை சூரியக் கடவுளாக வழிபடத் தொடங்கினாள்; பின்பு, தவறான உறவினால் தம்மூசு என்ற மகனைப் பெற்றெடுத்தபோது, நிம்ரோத் மீண்டும் தனது வயிற்றில் பிறந்திருக்கிறான் என அறிவித்தாள். மேலும், காட்டில் வெட்டப்பட்டிருந்த ஓர் அடிமரம் திடீரென துளிர்விட்டு வளர்ந்தது என்றும், நிம்ரோத் மீண்டும் பிறந்த நாளில் அந்த மரத்தில் பரிசுப் பொருட்களை வைத்துச் செல்கிறான் என்றும் பாபிலோன் எங்கும் கூறி அறிவித்தாள்; காட்டிலுள்ள பச்சையான மரக்கிளைகளை வெட்டி, பொன்னினாலும், வெள்ளியினாலும், அலங்காரப் பொருட்களினாலும் அதனை அலங்கரித்து ஜனங்களை வணங்கும்படிச் செய்தாள். மரத்தில் பரிசுப் பொருட்களை வைத்து, பின்னர் அதிலிருந்து எடுத்து மக்களுக்குக் கொடுப்பதை, நிம்ரோத் ஜனங்களுக்குப் பரிசு கொடுப்பதாக நினைக்கும் வழக்கம் பாபிலோனில் உருவானது. சூரியக் கடவுளாகக் கருதப்பட்ட நிம்ரோத், தம்மூசாக பிறந்திருக்கிறான் என்று கருதப்பட்ட தினத்தை நினைவுபடுத்துவதற்காவே பாபிலோனியர் மரக்கிளையினை அலங்கரித்து அதனை வணங்கிவந்தனர். 

இந்த பாபிலோனிய வழக்கத்தினைத் தொடர்ந்து, கிரேக்கர்கள் ஓக் (ழயம) மரத்தை புனிதமாகவும், டிரூயிட்ஸ் (Druids) மக்கள் அதனை தெய்வமாகவும், ரோமர்கள் தேவதாரு மரத்தை (fir) தங்களது பிரதான கடவுளான 'ஜுபிடருடையதாகவும்' வணங்கிவந்தனர். இதனாலேயே, பர்னபாவை 'யூப்பித்தராக' (in latin - Iuppiter) வணங்க முற்படுகின்றனர் (அப். 14:12). எகிப்தியருக்கு ஈச்சமரமும், பெர்சியர்களுக்கு யல்டா மரமும் வணக்கத்துக்குரியதாயிற்று. மரங்களை வணங்கும் வழக்கம் புறஜாதிகளுடையது. போதிமரம், ஆலமரம், அரசமரம், வேப்பமரம், புளியமரம் என பல்வேறு மரங்களை இன்றும் ஜனங்கள் வணங்கிவருவதும், மரங்களின் அருகிலேயே கோவில்களைக் கட்டிவருவதும், மரக்கிளைகளில் தொட்டில்களைக் கட்டிவிடுவதும் பாபிலோனிய வணக்கத்தின் தொடர்ச்சியே. 

இதனையே 'காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள்; அது தச்சன் கையாடுகிற வாச்சியால் பணிப்படும். வெள்ளியினாலும் பொன்னினாலும் அதை அலங்கரிக்கிறார்கள்' (எரே 10:2-5) என்று எரேமியாவும், பச்சையான சகல விருட்சங்களின்கீழும் (எசே 6:13) என்று எசேக்கியேலும், 'பச்சையான மரத்தின் கீழே' (ஏசா. 57:5) என்று ஏசாயாவும் மற்றும், உபா 12:2, 1இரா 14:23, 2இரா 16:4, 2இரா 17:10, 2நாளா 28:4, எரே 2:20, எசே 20:47 போன்ற வசனங்களும் தெளிவாக நமக்கு எடுத்துச் சொல்லுகின்றன. 

ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும் (ஏசா 11:1) என்ற தீர்க்கதரிசனம், 'கிளையினக் குறித்ததல்ல' மாறாக 'கிறிஸ்துவைக் குறித்தது.' நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள் (யோவான் 15:5) என்றும், கிளை என்னப்பட்டவராகிய என் தாசனை நான் வரப்பண்ணுவேன் (சக 3:8) என்றும், அவருடைய நாமம் கிளை என்னப்படும் (சக. 6:12) என்றும் இயேசுவைக் குறித்து வாசிக்கிறோமே. கிளையாகிய இயேசுவை விட்டுவிட்டு களையாகிய தன் பக்கம் ஜனங்களைத் திருப்பிக்கொள்ள சத்துரு செய்யும் முயற்சியே கிறிஸ்மஸ் மரம். இயேசுவின் மரணத்தின்போது, அவரை விட்டுவிட்டு ரோமர்களுடைய சிலுவைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும், இயேசு பிறப்பினை நினைவுகூரும்போது, 'கிறிஸ்துவுக்கு' முக்கியத்துவம் கொடுப்பதை விட்டுவிட்டு 'கிளைக்கு' முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கும் ஜனங்களை சாத்தான் வஞ்சித்துவிட்டான் என்பதே உண்மை. ‘O Christmas Tree, O Christmas tree, How lovely are your branches! You are the tree most loved! Your beauty green will teach me’ என்ற பாடல் வரிகள் கிறிஸ்மஸ் மரத்திற்குத்தானே வணக்கத்தைக் கொண்டு சேர்க்கிறது. பண்டிகையின்போது நாம் திறந்துவிடும் வாசலின் வழியாக பிசாசு நுழைந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையுடனிருப்போம். 

கொண்டாட்டம் என்ற பெயரில் கண்டதையும் செய்துவிட வேதம் அனுமதிப்பதில்லை. மனதின் ஆசைகளை பூர்த்திசெய்ய திகட ;டும் அளவிற்குக் கொண்டாடிவிடவேண்டும் என்று நினைப்பவர்களிடம் திருட்டுத்தனமாக சத்துரு நுழைந்துவிடுகிறான். சந்தோஷமே முதலிடம் பெறுவதினால், சத்தியமோ பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுகின்றது. கன்றுக்குட்டியை வைத்துக்கொண்டு, கர்த்தருக்குப் பண்டிகை (யாத். 32:5) என்று நாம் சொல்லிவிடக்கூடாது. 'கர்த்தருக்குப் பண்டிகை' என்ற பெயர் இருந்தால் மாத்திரம் போதாது, 'கன்றுகுட்டி' அப்புறப்படுத்தப்படவேண்டுமே. 'கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றினேன்' (1சாமு. 15:13) என்று சவுல் சொன்னபோதிலும், 'என் காதுகளில் விழுகிற ஆடுகளின் சத்தமும், எனக்குக் கேட்கிற மாடுகளின் சத்தமும் என்ன?' (1சாமு. 15:14) என்ற கேள்வி சவுலினிடத்தில் கேட்கப்பட்டதே. ஏன்? என்ற அறிவில்லாமல் நாம் செய்யும் காரியங்கள் வீண் என்று கர்த்தரால் அளக்கப்படும். 

நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு; அதை நான் வெறுக்கிறேன். நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம்பண்ணுவேன் (வெளி 2:15,16) என்று சத்தியத்துடன் சந்திக்கவிருக்கும் போரையும் நினைவுபடுத்துகிறாரே. ரோமர்களுடைய வழிபாட்டு முறைகளை கிறிஸ்தவர்களுடய ஆராதனையுடன் கலந்துவிட்டதே நிக்கொலாய் மதத்தினருடைய போதனை. இப்படிப்பட்டவைகளை அடையாளம் கண்டுகொண்டு அகற்றாதவர்கள், கர்த்தருக்கு எதிரிகளே. பாபிலோன் குமாரத்தியினிடத்தில் குடியிருக்கிற சீயோனே, உன்னை விடுவித்துக்கொள் (சக 2:7) என்று விடுக்கப்படும் எச்சரிப்புக்கு செவிகொடுக்கவேண்டியது நம் கடமை. நிம்ரோத்தையும், சூரிய வணக்கத்தையும் நினைவுகூருவதற்காக பாபிலோனியர்கள் உருவாக்கிய மரக்கிளை கலாச்சாரத்தின் வழியில் வந்த கிறிஸ்மஸ் மரம் ஓர் விக்கிரகமே. 

Comments

Popular posts from this blog

விவாகம், விவாகரத்து வேதம் சொல்லுவது என்ன?

விவாகம், விவாகரத்து  வேதம் சொல்லுவது என்ன? www.sinegithan.in விவாகரத்து செய்யலாமா?  யாரை தள்ளிவிட வேதம் அனுமதிக்கின்றது? தள்ளிவிடப்பட்டவரை விவாகம்  செய்யலாமா?  மறுமணம், வேதம் போதிப்பது என்ன?  இன்றைய உலகத்தை ஆனந்தத்திற்குள்ளும், அழுகைக்குள்ளும் இழுத்துச்செல்லும் இரண்டு சொற்கள் இவைகள். உருவாகும்போது 'விவாகம்' என்றும் உருக்குலையும்போது 'விவாகரத்து' என்றும் வெவ்வேறு வார்த்தைகளால் உலகம் இவைகளை பிரித்துச் சொல்லி விவரித்தாலும்; வேதத்தின் வெளிச்சத்தில், சத்தியம் என்னும் சட்டத்தின் கீழ் இவ்விரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள விளக்கத்தை நாம் அறிந்துகொண்டால், தந்திரமாக இவ்வுலகத்தில் கிரியைசெய்துகொண்டிருக்கும் சத்துருவின் அந்தகாரத்திற்குள் நம்முடைய வாழ்க்கையும் அகப்பட்டுக்கொள்ளாமல் தப்பித்துக்கொள்ள முடியும்.  தேவனும் மனிதனும் அவ்வாறே, மனிதனும் மனிதனும் இணைந்து மகிழ்ச்சியுடன் வாழ்வதையும், சந்தோஷமாக நடைபோடுவதையும் சற்றாகிலும் விரும்பாதவன் சாத்தான்; தேவனை விட்டு மனிதன் பிரிந்து வாழ்வதை மாத்திரமல்ல, மனிதனை விட்டும் மனிதன் பிரிந்துவாழவேண்டும் என்று பிரிவினையின் சுவராக விரும்புகின்றவன்

'பஸ்காவின் பலி'

  www.sinegithan.in யூதர்களது சந்திர நாட்காட்டியின்படி, ஒரு நாள், சூரியன் அஸ்தமிக்கும் சாயங்காலத்தில் தொடங்கி, மறுநாள் சூரியன் அஸ்தமிக்கும் சாயங்காலத்தில் முடிவடைகின்றது.  ' சாயங்காலமும் விடியற்காலமுமாகி , முதலாம் நாள் ஆயிற்று' (ஆதி 1:5,8,13,19,23,31) என்று ஆதியாகமத்திலும் இதனை நாம் வாசிக்கின்றோமே. 'சாயங்கால வேளை' என்பது ஒரு நாளின் தொடக்கம் என்பதினாலேயே, ஆண்டவருடைய பிரசன்னத்தில் அந்த நாளை தொடங்க, ஈசாக்கு சாயங்காலவேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்தான் (ஆதி. 24:63) என்றும் வேதத்தில் வாசிக்கின்றோமே. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையிலும் இந்த பழக்கம் இருந்ததனை நாம் வேதத்தில்  காணமுடியும்.  அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார் (மத். 14:23) என்று கூறுகின்றது வேதம்.      சாயங்காலத்தில் வேண்டுதல் செய்யும் வழக்கம் ஆபிரகாமின் ஊழியக்காரனது வாழ்க்கையில் இருந்ததினாலேயே, ஈசாக்கிற்கு பெண் பார்க்கச் சென்றுகொண்டிருந்த நேரத்திலும், 'சாயங்காலமாகிவிட்டது' என்பதை உணர்ந்த அவன், வேண்டுதல் செய்யத் தொடங

பஸ்காவா? ஈஸ்டரா?

சத்தியம் சொல்லும்  சரித்திரம் www.sinegithan.in பஸ்காவா? ஈஸ்டரா?         இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுள் 'யூதாஸ்' என்ற ஒருவனை எப்படியாகிலும் சாத்தான் தன்னகப்படுத்திக்கொண்டு, தான் விரும்பும்  காரியத்தைச் சாதிக்க விழைந்தது போல, இன்றும் சிலரையோ அல்லது சிலவற்றையோ தன்னகப்படுத்தி, தேவ ஜனங்களை திசைமாற்ற நினைக்கின்றான் சத்துரு. சத்தியத்திலிருந்து தேவ ஜனம் சறுக்கி விழுவதுதானே சத்துருவுக்கு சந்தோஷமான செய்தி; அத்தகைய செய்தியையே தினமும் கேட்டு காதுகுளிரவேண்டும் எனக் காத்திருக்கின்றான். இந்த கடைசி காலங்களில், வேகமாகச் செயல்படும் சத்துருவின் விவேகத்தை உணர்ந்துகொள்ளாமல், அவனது வலைக்குள் விழுந்தவர்களாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் மக்களுள் தேவ ஜனங்களில் சிலரும் அடக்கம் என்பது வேதனையான செய்திதான். உண்மையும் உத்தமமுமாய் ஓடிக்கொண்டிருக்கும் கர்த்தருடைய ஊழியர்களின் மத்தியில், கள்ளத் தீர்க்கதரிசிகளையும் மற்றும் கள்ளப் போதகர்களையும் நுழைத்துவிடுகின்றான். 'ஆண்டவருக்கே ஆராதனை' என்ற அடிப்படைச் சத்தியத்தை மறக்கச்செய்து, 'ஜனங்கள் ஆனந்தமாயிருக்கவே ஆராதனை' என்ற நினைவை நோக்கி நடக்கச்செய்க