Skip to main content

'பூரீம்' பண்டிகை


'பூரீம்' பண்டிகை

www.sinegithan.in

    எகிப்திலிருந்து விடுதலையான நாளன்று 'பஸ்கா' ஆசரிக்கப்பட்டதுபோல, அகாஸ்வேரு ராஜாவின் நாட்களில் யூதர்களுக்கு விரோதமாய் எழும்பின சத்துருக்களின் கைகளிலிருந்து  அவர்கள் விடுவிக்கப்பட்டதையும், விரோதமாக எழும்பின சத்துருக்களை நிர்மூலமாக்கினதையும் நினைவுகூரும்படியாக 'பூரீம்' பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்து தேசம் முதல் எத்தியோப்பியா தேசம் வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும், சூசான் என்னும் தன்னுடைய அரமனையிலிருந்து ஆட்சிசெய்துகொண்டிருந்த ராஜாவாகிய அகாஸ்வேரு, ஆமான் என்பவனை மேன்மைப்படுத்தி, சகல பிரபுக்களுக்கும் மேலாக அவனுடைய ஆசனத்தை உயர்த்திவைத்தபோது (எஸ்தர் 3:1), ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரர் எல்லாரும் ஆமானை வணங்கி நமஸ்கரித்து வந்தார்கள்; அவனுக்கு இப்படிச் செய்யவேண்டும் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்; ஆனாலும் மொர்தெகாய் அவனை வணங்கவுமில்லை, நமஸ்கரிக்கவுமில்லை. அப்போது, அரமனையின் வாசலிலிருக்கிற, ஆமானை வணங்குகின்ற மற்ற ஊழியக்காரர் மொர்தெகாயை நோக்கி: நீ ராஜாவின் கட்டளையை மீறுகிறது என்ன? என்று கேட்கின்றார்கள். அத்தோடு அவர்கள் நிறுத்திவிடவில்லை, தாங்கள் வணங்குகின்ற ஆமானிடத்திலும் சென்று 'மொர்தெகாய் உம்மை வணங்குகிறதில்லை' என்று ஆமான் கோபப்படும்படியாக அவனைத் தூண்டிவிடுகின்றார்கள். (எஸ்தர் 3:4)

தேவ ஜனங்களை 'குற்றம்பிடிக்கவேண்டும்' என்று நினைக்கும் சத்துருக்களின் மனநிலை இங்கு வெளிப்படுகின்றதை நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். அகாஸ்வேரு ராஜாவின் அரமனையில் ஆமான் உயர்த்தப்பட்டபோது, ராஜாவின் கட்டளைப்படி, 'தாங்கள் வணங்குவதோடு' தங்கள் கடமை முடிந்தது என்று அவர்கள் நிறுத்திக்கொள்ளாமல், அடுத்தவரைக் குற்றம்பிடிக்கவேண்டும் என்ற மனநிலையோடு, மற்றவர்கள் ஆமானை வணங்குகின்றார்களா? என்று பார்க்கின்றார்கள். 

தரியு ராஜாவின் நாட்களில், பிரதானிகளும் தேசாதிபதிகளும் கூட்டங்கூடி, ராஜாவினிடத்தில் போய், 'ராஜாவே, நீர் என்றும் வாழ்க. எவனாகிலும் முப்பது நாள்வரையில் ராஜாவாகிய உம்மைத்தவிர எந்தத் தேவனையானாலும் மனுஷனையானாலும் நோக்கி, யாதொரு காரியத்தைக் குறித்து விண்ணப்பம்பண்ணினால், அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்படவேண்டும்' (தானியேல் 6:7) என்று தானியேலுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்ததும் இதைத்தானே வெளிப்படுத்துகின்றது. அதுமாத்திரமல்ல, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அறுபதுமுழ உயரமும் ஆறு முழ அகலமுமான ஒரு பொற்சிலையைப் பண்ணுவித்து, பாபிலோன் மாகாணத்திலிருக்கிற தூரா என்னும் சமபூமியிலே நிறுத்தி, எவனாகிலும் தாழ விழுந்து, அதைப் பணிந்துகொள்ளாமற்போனால், அவன் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படுவான் என்று சொன்னபோது,  சகல ஜனங்களும், எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம் முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தைக் கேட்டவுடனே, சகல ஜனத்தாரும் ஜாதியாரும் பாஷைக்காரரும் தாழ விழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொண்டார்கள். அந்நேரத்தில், கல்தேயரில் சிலர் ராஜசமுகத்தில் வந்து, யூதர்பேரில் குற்றஞ்சாற்றி, பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும்படி நீர் ஏற்படுத்தின சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் யூதரான மனுஷர் இருக்கிறார்களே; அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை; அவர்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்யாமலும், நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருக்கிறார்கள் (தானியேல் 3:1,6,7,8,12) என்று காட்டிக்கொடுக்கின்றார்களே; இவர்களின் குணமும் இதைத்தானே நமக்கு வெளிப்படுத்துகின்றது. யோசேப்பை அறியாத புதிய ராஜன் வந்தபோதும், தங்களிலும் பலத்தவர்கள் மற்றும் ஏராளமானவர்கள் என்று எண்ணி, தேவ ஜனத்தை அழித்துவிடவேண்டும் என்றுதானே எண்ணினான். (யாத். 1:8,9)

இவ்வுலகத்தில் வாழும் மற்ற ஜனங்களைப் போன்ற வாழ்க்கை முறை தேவ ஜனத்தினிடத்தில் காணப்படாததே, சத்துரு தேவ ஜனத்திற்கு விரோதமாகவும், அவர்களை அழிக்கும்படியாகவும் எழுவதற்கான முதற்காரணம் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டியது அவசியம். இன்றும் இப்படிப்பட்ட ஜனம் இவ்வுலகத்தில் உண்டு.

மேலும், அப்பொழுது ஆமான் அகாஸ்வேரு ராஜாவை நோக்கி: உம்முடைய ராஜ்யத்தின் சகல நாடுகளிலுமுள்ள ஜனங்களுக்குள்ளே ஒருவித ஜனங்கள் சிதறுண்டு பரம்பியிருக்கிறார்கள்; அவர்களுடைய வழக்கங்கள் சகல ஜனங்களுடைய வழக்கங்களுக்கும் விகற்பமாயிருக்கிறது; அவர்கள் ராஜாவின் சட்டங்களைக் கைக்கொள்ளுகிறதில்லை; ஆகையால் அவர்களை இப்படி விட்டிருக்கிறது ராஜாவுக்கு நியாயமல்ல. ராஜாவுக்குச் சம்மதியானால், அவர்களை அழிக்கவேண்டுமென்று எழுதி அனுப்பவேண்டியது; அப்பொழுது நான் ராஜாவின் கஜானாவிலே கொண்டுவந்து செலுத்த பதினாயிரம் தாலந்து வெள்ளியை எண்ணிக் காரியக்காரர் கையில் கொடுப்பேன் (எஸ்தர் 3:8,9) என்ற யூதர்களுக்கு எதிரான ஆமானின் வார்த்தைகளும் இதைத்தானே நமக்கு வெளிக்காட்டுகின்றன. 

இப்படிப்பட்ட, தேவ ஜனத்தின் அழிவை விரும்புகின்ற மனிதனாகிய ஆகாகியனான அம்மெதாத்தாவின் குமாரனும் யூதரின் சத்துருவுமாகிய ஆமானிடத்தில், 'ராஜா தன் கையிலிருக்கிற தன் மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்து, ஆமானை நோக்கி: அந்த வெள்ளியை நீ வைத்துக்கொள்; அந்த ஜனத்துக்கு உன் இஷ்டப்படி செய்யலாம்' (எஸ்தர் 3:10,11) என்று சொன்னபோது, ஆமானின் மனம் எத்தனையாய் மகிழ்ச்சியடைந்திருக்கும்! தான் சத்துருக்களாய் நினைத்துக்கொண்டிருக்கும் 'யூத ஜனத்திற்கு' எதிராகச் சட்டத்தை இயற்ற எத்தனையாய் துடித்திருக்கும்! 'மொர்தெகாய்' என்னும் ஒரு மனிதன் தன்னை வணங்கவில்லை என்பதற்காக, 'மொர்தெகாயை மாத்திரமல்ல, அவனது இனமான யூத இனம் முழுவதையும் அழித்துவிடவேண்டும் என்று துடிப்பதுதான் சத்துருவின் குணம்.' இன்றும் இத்தகைய குணம் சத்துருக்களினிடத்தில் காணப்படவில்லையோ? கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களைக் கொன்றுவிடவேண்டும் என்றும், அவரை அறிவிக்கும் அனைவரையும் வேரோடு அழித்துவிடவேண்டும் என்றும், அவர்களது இருப்பிடமும் மற்றும் நடந்து சென்ற தடங்களும்கூடத் தெரியாதபடிக்குச் செய்துவிடவேண்டும் என்றும் போராடி, தோற்றுப்போன மனிதர்களின் சரித்திரம் உலகத்தில் உண்டே!  

யூதர்களின் முதலாம் மாதமான நிசான் மாதத்தின் பதின்மூன்றாந்தேதியில், ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள்; ஆமான் கற்பித்தபடியெல்லாம் ராஜாவின் தேசாதிபதிகளுக்கும், ஒவ்வொரு நாட்டின்மேல் வைக்கப்பட்டிருந்த துரைகளுக்கும், ஒவ்வொரு ஜனத்தின் பிரபுக்களுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும், ஆதார் மாதமான பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந்தேதியாகிய ஒரே நாளிலே சிறியோர் பெரியோர் குழந்தைகள் ஸ்திரீகள் ஆகிய சகல யூதரையும் அழித்துக் கொன்று நிர்மூலமாக்கவும், அவர்களைக் கொள்ளையிடவும் ராஜாவாகிய அகாஸ்வேருவின் பேரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் அதற்கு முத்திரை போடப்பட்டு, அஞ்சற்காரர் கையிலே ராஜாவின் நாடுகளுக்கெல்லாம் கட்டளைகள் அனுப்பப்பட்டது (எஸ்தர் 3:12,13). இந்த உத்தரவினால் 'சூசான் நகரம் கலங்கிற்று' (எஸ்தர் 3:15) என்றும், ராஜாவின் உத்தரவும் அவனுடைய கட்டளையும் போய்ச் சேர்ந்த ஒவ்வொரு நாட்டிலும் ஸ்தலத்திலுமுள்ள யூதருக்குள்ளே மகா துக்கமும், உபவாசமும், அழுகையும், புலம்பலும் உண்டாகி, அநேகர் இரட்டுடுத்திச் சாம்பலில் கிடந்தார்கள் (எஸ்தர் 4:3) என்றே வேதத்தில் நாம் வாசிக்கின்றோம். அரமனையின் வாசலிலிருந்த யூதனாகிய மொர்தெகாய் இதனை அறிந்தபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டுடுத்தி, சாம்பல் போட்டுக்கொண்டு, நகரத்தின் நடுவே புறப்பட்டுப்போய், துயரமுள்ள மகா சத்தத்துடனே அலறிக்கொண்டு ராஜாவின் அரமனை வாசல் முகப்பு மட்டும் வந்தான். மொர்தெகாயின் சிறிய தகப்பனது குமாரத்தியும், ராஜஸ்திரீயுமான எஸ்தர், மொர்தெகாய் உடுத்திருந்த இரட்டை எடுத்துப்போட்டு, அவனை உடுத்துவிக்கிறதற்கு வஸ்திரங்களை அனுப்பினபோதிலும், அவன் அவைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. (எஸ்தர் 4:1-4)

மொர்தெகாய் இரட்டுடுத்தியிருப்பதின் காரியம் என்ன? அதின் முகாந்தரம் என்ன? என்று அறியும்படி, மொர்தெகாயினிடத்தில் விசாரிக்க பிரதானிகளில் ஒருவனாகிய ஆத்தாகை எஸ்தர் அனுப்பியபோது, மொர்தெகாய் தனக்குச் சம்பவித்த எல்லாவற்றைப்பற்றியும், யூதரை அழிக்கும்படி ஆமான் ராஜாவின் கஜானாவுக்கு எண்ணிக்கொடுப்பேன் என்று சொன்ன பணத்தொகையைப் பற்றியும் அவனுக்கு அறிவித்ததும் அன்றி, யூதர்களை அழிக்கும்படி சூசானில் பிறந்த கட்டளையின் நகலையும் அவனிடத்தில் கொடுத்து, அதை எஸ்தருக்குக் காண்பித்துத் தெரியப்படுத்தவும், அவள் அகத்தியமாய் ராஜாவினிடத்திற் போய், அவனிடத்தில் தன் ஜனங்களுக்காக விண்ணப்பம்பண்ணவும் மன்றாடவும் வேண்டுமென்று அவளுக்குச் சொல்லச்சொல்லுகின்றான். (எஸ்தர் 4:5,8)

மொர்தெகாயின் வார்த்தைகளை, பிரதானியாகிய ஆத்தாகின் மூலமாகக் கேட்ட எஸ்தர், 'யாராவது அழைப்பிக்கப்படாமல், உள்முற்றத்தில் ராஜாவினிடத்தில் பிரவேசித்தால், புருஷரானாலும் ஸ்திரீயானாலும் சரி, அவர்கள் பிழைக்கும்படிக்கு அவர்களுக்கு ராஜா பொற்செங்கோலை நீட்டினாலொழிய மற்றப்படி சாகவேண்டும் என்கிற ஒரு தவறாத சட்டமுண்டு, இது ராஜாவினுடைய சகல ஊழியக்காரருக்கும், ராஜாவினுடைய நாடுகளிலுள்ள சகல ஜனங்களுக்கும் தெரியும்; நான் இந்த முப்பது நாளளவும் ராஜாவினிடத்தில் வரவழைப்பிக்கப்படவில்லை' என்று சொல்லச்சொன்னபோது (எஸ்தர் 4:11), யூத ஜனங்களை அழிவிலிருந்து காப்பாற்றவேண்டும் என்ற அவசரத்தை உணர்ந்த மொர்தெகாய் மறுமொழியாக, 'நீ ராஜாவின் அரமனையிலிருக்கிறதினால், மற்ற யூதர் தப்பக்கூடாதிருக்க, நீ தப்புவாயென்று உன் மனதிலே நினைவுகொள்ளாதே. நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான். அப்பொழுது எஸ்தர், 'நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்றுநாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம்; இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள். (எஸ்தர் 4:13,14,16). 

'ராஜ ஸ்திரீயாக' தான் உயர்த்தப்பட்டதின் ரகசியத்தை எஸ்தர் உணராதிருந்ததுபோல, நாமும் நம்முடைய வாழ்க்கையின் ரகசியத்தை சில நேரங்களில் அறியாதிருக்கின்றதினாலேயே, அநேக ஜனஙகள் இன்னும் அழிவின் விளிம்பிலேயே நிற்கிறார்கள். யூத ஸ்திரீயாகிய எஸ்தர் இருக்கும் சூசான் அரமனையில்தான் யூதர்களுககு விரோதமாகத் திட்டங்கள் தீட்டப்படுகின்றன; ஆனால், எஸ்தரோ அதனை அறியவில்லை, 'மொர்தெகாயின் மூலமாகவே அவளுக்கு நகல் அனுப்பப்படுகின்றது (எஸ்தர் 4:8)'. அநேக நேரங்களில் நமக்கு இருக்கும் பாதுகாப்பான சூழ்நிலைகள், அழிவிலிருக்கும் ஆத்துமாக்களைப் பாராதபடிக்கு நமது பார்வையினைக் குருடாக்கிவிடக்கூடும்.  

ராஜ ஸ்திரீயாக தான் இருந்தாலும், யூதர்களின் அழிவை தடுப்பதிலும், ராஜாவினிடத்தில் அந்த செய்தியைக் கொண்டு சேர்ப்பதிலும் எஸ்தர் மிகவும் கவனமாகச் செயல்பட்டாள்.  மூன்றாம் நாளிலே எஸ்தர் ராஜவஸ்திரந் தரித்துக்கொண்டு, ராஜ அரமனையின் உள்முற்றத்தில், ராஜா கொலுவிருக்கும் ஸ்தானத்துக்கு எதிராக வந்து நின்றபோது, ராஜா அவளை நோக்கி: 'எஸ்தர் ராஜாத்தியே, உனக்கு என்ன வேண்டும்? நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும், உனக்குக் கொடுக்கப்படும்' என்று கேட்டபோது, உடனே, சமயம் கிடைத்துவிட்டது என்று எண்ணி, ராஜாவினிடத்தில் 'யூதர்களை அழிக்கவேண்டும்' என்ற ஆமானின் திட்டத்தைக் குறித்து அவசரப்பட்டு அவள் சொல்லிவிடவில்லை; மாறாக, 'ராஜாவும், ஆமானும் நான் செய்வித்த விருந்துக்கு வரவேண்டும்' என்ற விருப்பத்தை மாத்திரமே வெளிப்படுத்துகின்றாள். ராஜாவுக்கு தான் விருந்தளிக்கும் நேரமே, தான் அவரிடத்தில் பேசவும், சத்துருவை காட்டிக்கொடுக்கவும் சரியான தருணம் என்பதை சரியாகப் புரிந்து செயல்பட்டாள் எஸ்தர். (எஸ்தர் 5:1,3,4)

எஸ்தரின் மனதில் ஏதோ இருக்கிறது என்பதை அறிந்துகொண்ட ராஜா, விருந்து பரிமாறப்படும் நேரத்திலும் அவளை நோக்கி, 'உன் வேண்டுதல் என்ன?' (எஸ்தர் 5:6) என்று கேட்டபோது, 'நான் இன்னும் தங்களுக்குச் செய்யப்போகிற விருந்துக்கு வரவேண்டும்' (எஸ்தர் 5:8) என்பதே எஸ்தரின் பதிலாயிருந்தது. முதல் நாள் விருந்தின்போது, ராஜாவுக்கு மாத்திரமல்ல தன் இனத்தின் சத்துருவாகிய ஆமானுக்கும் விருந்து கொடுத்தாள் எஸ்தர்; விருந்தின்போது ஆமானினிடத்தில், தன் இனத்தின் சத்துரு என்று அவள் வித்தியாசம் காண்பிக்கவில்லை, கடினமாகவும் நடந்துகொள்ளவில்லை. முதல் நாள் விருந்தின்போது, 'ஆமான் சந்தோஷமும் மகிழ்ச்சியுமாய்ப் புறப்பட்டான்' (எஸ்தர் 5:9) என்றே வேதத்தில் வாசிக்கின்றோம் நாம். ஆமான் சந்தோஷமாகப் புறப்பட்டிருக்கவேண்டுமென்றால், எஸ்தர் அவ்வாறு நடந்திருக்கவேண்டுமே. அதுமாத்திரமல்ல, 'ராஜஸ்திரீயாகிய எஸ்தரும், தான் செய்த விருந்துக்கு ராஜாவுடனேகூட என்னைத் தவிர வேறொருவரையும் அழைக்கவில்லை; நாளைக்கும் ராஜாவுடனேகூட நான் விருந்துக்கு வரவழைக்கப்பட்டிருக்கிறேன்' (எஸ்தர் 5:12) என்று தன் மனைவியிடத்திலும் ஆமான் பெருமைப்பட்டுக்கொள்ளுகின்றான்.

இரண்டாம் நாள் விருந்தில் திராட்சரசம் பரிமாறப்படும்போது, ராஜா எஸ்தரை நோக்கி: எஸ்தர் ராஜாத்தியே, உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும்; நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும் கிடைக்கும் என்று கேட்டபோது,  இதுதான் தக்க சமயம் என்பதை அறிந்த எஸ்தர் பிரதியுத்தரமாக, 'என் வேண்டுதலுக்கு என் ஜீவனும், என் மன்றாட்டுக்கு என் ஜனங்களும் எனக்குக் கட்டளையிடப்படுவதாக. எங்களை அழித்துக் கொன்று நிர்மூலமாக்கும்படி நானும் என் ஜனங்களும் விற்கப்பட்டோம்; அடிமைகளாகவும் வெள்ளாட்டிகளாகவும் விற்கப்பட்டுப்போனாலும் நான் மவுனமாயிருப்பேன்; இப்பொழுதோ ராஜாவுக்கு உண்டாகும் நஷ்டத்துக்கு அந்தச் சத்துரு உத்தரவாதம்பண்ண முடியாது என்றாள் (எஸ்தர் 7:1-4). அப்பொழுது ராஜா, 'இப்படிச் செய்யத் துணிகரங்கொண்டவன் யார்? அவன் எங்கே? என்று கேட்டபோது, எஸ்தர் மறுமொழியாக, 'சத்துருவும் பகைஞனுமாகிய அந்த மனிதன் இந்த துஷ்ட ஆமான்தான்' என்றாள் (எஸ்தர் 7:5,6). மொர்தெகாய்க்கு ஆமான் செய்த தூக்கு மரத்திலே ஆமான் தூக்கிப்போடப்பட்டான்.

இதனைத்தானே, தானியேலின் வாழ்க்கையிலும் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களின் வாழ்க்கையிலும் நாம் வாசிக்கின்றோம். தானியேலின்மேல் குற்றஞ்சாற்றின மனுஷரையோவென்றால், ராஜா கொண்டுவரச்சொன்னான்; அவர்களையும் அவர்கள் குமாரரையும் அவர்கள் மனைவிகளையும் சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள்; அவர்கள் கெபியின் அடியிலே சேருமுன்னே சிங்கங்கள் அவர்கள்மேல் பாய்ந்து, அவர்கள் எலும்புகளையெல்லாம் நொறுக்கிப்போட்டது (தானி. 6:24) என்றும்,  ராஜாவின் கட்டளை கடுமையாயிருந்தபடியினாலும், சூளை மிகவும் சூடாக்கப்பட்டிருந்தபடியினாலும், அக்கினி ஜுவாலையானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைத் தூக்கிக்கொண்டுபோன புருஷரைக் கொன்று போட்டது (தானி. 3:22) என்றும் வாசிக்கின்றோம். குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியில் தானே விழுந்தான் (சங். 7:15) என்றும், என் கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள்; என் ஆத்துமா தொய்ந்துபோயிற்று; எனக்கு முன்பாகக் குழியை வெட்டி, அதின் நடுவிலே விழுந்தார்கள் (சங். 57:6) என்றும் சங்கீதக்காரன் கூறும் வார்த்தைகள் ஆமானைப் போன்றவர்களின் வாழ்க்கையைத்தானே நமக்கு பிரதிபலிக்கின்றன. 

சத்துருவுக்கு எதிரான போராட்டத்தில், இத்தகைய சமயோசிதம் நமக்கும் தேவையல்லவா! அநேக நேரங்களில், சமயத்தை அறியாமல் நாம் செயல்பட்டுவிடுகின்றோம், மாம்சத்தில் அவசரப்பட்டு காரியங்களைச் சாதித்துவிடத் துடிக்கிறோம். தூக்கு மரம் செய்ய சத்துருவுக்கு சமயமும் கொடுத்து, சத்துருவையே அதில் தூக்கிப்போடுவதுதான் ஆண்டவரின் யுக்தி. ரோமப் போர்ச் சேவர்கர்கள் இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தார்கள் என்ற செய்தி உண்மைதான், உலகமும் ஏற்றுக்கொண்டதுதான், சரித்திரத்தின் நிகழ்வுதான்; இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள் (அப். 2:23) என்ற சத்தியம் மெய்யே! என்றாலும், நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து, துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிN;ல வெற்றிசிறந்தார் (கொலோ. 2:15) என்ற மறுபக்கத்தை நாம் மறந்துவிடக்கூடாதே! சத்துரு தூக்கு மரங்களைச் செய்யலாம்; என்றாலும், தேவஜனமோ சத்துருவை தொங்கவிட்டுவிட்டு உயிர்த்தெழுந்துவிடும். 

  ஆமானுடைய குணத்தின் மற்றும் ஒரு பக்கத்தையும் நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். முதல் நாள் விருந்தினை ராஜாவுடனும், ராஜஸ்திரீயுடனும் முடித்து, சந்தோஷமாக அங்கிருந்து வெளியேறிய ஆமான், அரமனை வாசலிலிருந்த மொர்தெகாயைக் கண்டதும் அத்தனை சந்தோஷத்தையும் இழந்துபோகின்றான். பகைமை உறைந்திருக்கும் உள்ளத்தின் நிலை இதுவே. 'அந்த யூதனாகிய மொர்தெகாய் ராஜாவின் அரமனைவாசலில் உட்கார்ந்திருக்கிறதை நான் காணுமளவும் அவையெல்லாம் எனக்கு ஒன்றுமில்லை' (எஸ்தர் 5:13) என்று சந்தோஷத்தின் மத்தியிலும் தன் மனதிலிருக்கும் துக்கத்தையும், பகைவனாகிய மொர்தெகாயைக் குறித்துமே மனைவியினிடத்தில் பகிர்ந்துகொள்ளுகின்றான். ஆமானுடைய சந்தோஷத்தில் அவனோடு கூட பங்குபெறாத அவனுடைய மனைவியாகிய சிரேஷும் மற்றும் அவனது சிநேகிதர்களும், ஆமானின் துக்கத்தில் துணை நிற்பதுபோன்ற வார்த்தைகளைப் பேசத் தொடங்குகின்றனர். 'பகைவர்களுக்கு எதிராக நம்மைப் பெலப்படுத்தும் மனிதர்களும், பகைமைக்கு சாதகமாக நமக்கு துணை நிற்கும் மனிதர்களும் நமக்கு படுகுழியினையே வெட்டுகின்றனர்' என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். இத்தகைய மனிதர்களின் வலைக்குள் நம்முடைய வாழ்க்கை ஒருபோதும் மாட்டிக்கொள்ளக்கூடாதே! 

ஆமானின் மனைவியும் மற்றும் அவனுடைய சிநேகிதர்களும் செய்தது இதுவே. அவன் மனைவியாகிய சிரேஷும் அவனுடைய சிநேகிதர் எல்லாரும் அவனைப் பார்த்து: ஐம்பதுமுழ உயரமான ஒரு தூக்குமரம் செய்யப்படவேண்டும்; அதிலே மொர்தெகாயை தூக்கிப்போடும்படி நாளையதினம் நீர் ராஜாவுக்குச் சொல்லவேண்டும்; பின்பு சந்தோஷமாய் ராஜாவுடனேகூட விருந்துக்குப் போகலாம் என்றார்கள்; இந்தக் காரியம் ஆமானுக்கு நன்றாய்க் கண்டதினால் தூக்குமரத்தைச் செய்வித்தான் (எஸ்தர் 5:14). அடுத்த நாள் விருந்துக்குச் செல்லும் முன்னதாக, எத்தனை சந்தோஷமாக, ஒரே நாளில் இந்த தூக்கு மரத்தை ஆமான் செய்து முடித்திருந்திருப்பான் என்பதை நினைக்கும்போது நமக்கு ஆச்சரியமாக உள்ளதல்லவா! ஆம், ஆமானின் மனைவியும் மற்றும் சிநேகிதர்களும் விரித்த வலையில் ஆமானின் வாழ்க்கையே சிக்கிக்கொண்டது. ஆம், தேவ ஜனங்களை அழிக்கவேண்டும் என்று விரும்புகின்ற சத்துருவின் அவசரத்திற்குள் அகப்பட்டு, தங்கள் வாழ்க்கையைப் பாழடித்த மனிதர்கள் இப்பூமியில் உண்டு. 

மொர்தெகாயைத் தூக்கிப்போடும்படியாக ஆமான் தூக்கு மரத்தைச் செய்துகொண்டிருந்த அந்த ராத்திரியிலே ராஜாவின் தூக்கத்தைத் தடுத்தார் ஆண்டவர். மொர்தெகாயை தூக்கிப்போடும்படியாக ஆமான் தூக்கு மரத்தை ஆயத்தப்பட்டுக்கொண்டிருக்கும் முன்னதாகவே, மொர்தெகாயை உயர்த்துவதற்கான அத்தனை ஆயத்தங்களையும் செய்துமுடித்திருந்தார் ஆண்டவர். 'வாசற் காவலாளரில் ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானாவும் தேரேசும், ராஜாவாகிய அகாஸ்வேருவின்மேல் கைபோடப்பார்த்த செய்தியை மொர்தெகாய் அறிவித்தான்' என்பதை நடபடி புஸ்தகங்களில் வாசித்த ராஜா, 'இதற்காக மொர்தெகாய்க்கு கனமும் மேன்மையும் செய்யப்பட்டதா என்று கேட்டபோது, அதற்கு ராஜாவைச் சேவிக்கிற ஊழியக்காரர்: அவனுக்கு ஒன்றும் செய்யப்படவில்லை என்று சொன்னதைக் கேட்ட ராஜா (எஸ்தர் 6:2,3), அச்சமையத்தில் அரமனைக்கு வந்து, 'தான் செய்த தூக்குமரத்திலே மொர்தெகாயைத் தூக்கிப்போடவேண்டுமென்று' அனுமதி கேட்கவிருந்த ஆமான் ராஜாவினிடத்தில் பேசுவதற்கு முன்னமே (எஸ்தர் 6:4), ஆண்டவர் ராஜாவின் வாயைத் திறந்து, 'ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு என்னசெய்யப்படவேண்டும்?' (எஸ்தர் 6:6) என்று ஆமானிடத்தில் பேசவைத்தார். இதைக் கேட்டதும், 'ஆமானை தூக்கிப்போட அனுமதி கேட்கவேண்டும்' என்பதை மறந்து, தன்னைத்தான் ராஜா கனம்பண்ண விரும்புகிறார் என்ற மகிழ்ச்சியின் நிறைவோடு ஆமான் ராஜாவை நோக்கி, 'ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால், ராஜா உடுத்திக்கொள்ளுகிற ராஜவஸ்திரமும், ராஜா ஏறுகிற குதிரையும், அவர் சிரசிலே தரிக்கப்படும் ராஜமுடியும் கொண்டுவரப்படவேண்டும். அந்த வஸ்திரமும் குதிரையும் ராஜாவுடைய பிரதான பிரபுக்களில் ஒருவனுடைய கையிலே கொடுக்கப்படவேண்டும்; ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனை அலங்கரித்தபின், அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படி செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறப்படவேண்டும்' (எஸ்தர் 6:7-9) என்று தனக்கு என்ன என்ன செய்யப்படவேண்டும் என்று விரும்பினானோ, அத்தனையையும் ராஜாவினிடத்தில் குறைவின்றி கூறுகின்றான்.  

ஆகிலும், ராஜா ஆமானை நோக்கி: சீக்கிரமாய் நீ சொன்னபடி வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய், ராஜ அரமனையின் வாசலிலே உட்கார்ந்திருக்கிற யூதனாகிய மொர்தெகாய்க்கு அந்தப்பிரகாரம் செய்; நீ சொன்ன எல்லாவற்றிலும் ஒன்றும் தவறாதபடி பார் (எஸ்தர் 6:10) என்று சொன்ன வார்த்தைளோ அப்பொழுதே ஆமானை தூக்குமரத்தில் ஏற்றினதுபோல இருந்திருக்கும் அல்லவா! ஆமான் தூக்கு மரத்தை ஆயத்தப்படுத்தியிருந்தான்; ஆனால், ஆண்டவரோ மொர்தெகாயை தேசத்தில் தூக்கி வைக்க ஆயத்தமாயிருந்தார். தூக்குமரத்தைச் செய்தவனைக் கொண்டே தூக்கிவைக்கும் பணியைச் செய்வது ஆண்டவரின் சிறப்பு அல்லவா! 

'சிறையிருப்பில் மீந்திருக்கிறவர்கள் அந்தத் தேசத்திலே மகா தீங்கையும் நிந்தையையும் அநுபவிக்கிறார்கள்; எருசலேமின் அலங்கம் இடிபட்டதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கிறது' (நெகே. 1:3) என்று சொன்னதைக் கேட்டதும், நெகேமியா என்னும் 'ஒரு மனிதன்' எடுத்த முயற்சியினால் எருசலேம் கட்டப்பட்டதுபோல, 'மொர்தெகாய்' என்னும் 'ஒரு மனிதன்' எடுத்த முயற்சியையும் வேதம் இங்கே நமக்கு எடுத்துக்கூறுகின்றதே. 

எஸ்தரும் மொர்தெகாயும் காப்பாற்றப்பட்டாலும், மொர்தெகாய் அரமனையிலே உயர்த்தப்பட்டாலும், ஆமான் மூலமாக அனுப்பப்பட்ட கட்டளையினால், யூத இனம் அழிவைச் சந்திக்கும் நாள் நெருங்கிக்கொண்டிருந்ததை அறிந்த எஸ்தர், ராஜாவை நோக்கி, 'ராஜாவின் நாடுகளிளெல்லாம் இருக்கிற யூதரை அழிக்கவேண்டும் என்று அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியன் தீவினையாய் எழுதின கட்டளைகள் செல்லாமற்போகப்பண்ணும்படி எழுதி அனுப்பப்படவேண்டும். என் ஜனத்தின்மேல் வரும் பொல்லாப்பை நான் எப்படிப் பார்க்கக்கூடும்? என் குலத்துக்கு வரும் அழிவை நான் எப்படிச் சகிக்கக்கூடும்?' (எஸ்தர் 8:5,6) என்று கேட்டதினால், சீவான் மாதம் என்னும் மூன்றாம் மாதம் இருபத்துமூன்றாந்தேதியாகிய அக்காலத்திலேதானே ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள்; மொர்தெகாய் கற்பித்தபடியெல்லாம் யூதருக்கும் இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசமட்டுமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளின் தேசாதிபதிகளுக்கும், அதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும், யூதருக்கு அவர்கள் அட்சரத்திலும் அவர்கள் பாஷையிலும் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டபின், குதிரைகள்மேலும் வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் ஏறிப்போகிற அஞ்சற்காரர் கையில் அனுப்பப்பட்டது (எஸ்தர் 8:9,10). 

அகாஸ்வேரு ராஜாவுடைய எல்லா நாடுகளிலும் ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந்தேதியாகிய அந்த ஒரே நாளிலே, அந்தந்தப் பட்டணத்திலிருக்கிற யூதர் ஒன்றாய்ச் சேர்ந்து, தங்கள் பிராணனைக் காப்பாற்றவும், தங்களை விரோதிக்கும் சத்துருக்களாகிய ஜனத்தாரும் தேசத்தாருமான எல்லாரையும், அவர்கள் குழந்தைகளையும், ஸ்திரீகளையும் அழித்துக் கொன்று நிர்மூலமாக்கவும், அவர்கள் உடைமைகளைக் கொள்ளையிடவும், ராஜா யூதருக்குக் கட்டளையிட்டார் என்று எழுதியிருந்தது (எஸ்தர் 8:11,12); யூதர் சூசான் அரமனையில் ஜந்நூறுபேரையும் ஆமானின் பத்துக் குமாரரையும் கொன்று நிர்மூலமாக்கினதோடு, ஆமானின் பத்துக் குமாரருடைய உடலையும் தூக்கிப்போட்டார்கள். யூதர் ஆதார் மாதத்தின் பதினாலாந்தேதியிலும் கூடிச்சேர்ந்து, சூசானில் முந்நூறுபேரைக் கொன்றுபோட்டார்கள். அத்துடன், ராஜாவின் நாடுகளிலுள்ள மற்ற யூதர்கள் தங்கள் பிராணனைத் தற்காக்கவும், தங்கள் பகைஞருக்கு விலகி இளைப்பாறுதல் அடையவும் ஒருமிக்கச் சேர்ந்து, தங்கள் விரோதிகளில் எழுபத்தையாயிரம் பேரைக் கொன்றுபோட்டார்கள்.  எத்தனையாய் தங்களுக்கு விரோதமாய் எழும்பின சத்துருக்களை யூதர்கள் சங்கரித்தாலும், கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை (எஸ்தர் 9:12,14-16). சூசான் நகரம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திருந்தது (எஸ்தர் 8:15). ஆதார் மாதத்தின் பதிமூன்று மற்றும் பதினான்கு ஆகிய இரண்டு தினங்கள் சத்துருக்களை கொன்று, பதினாலாம் மற்றும் பதினைந்தாந்தேதியிலே இளைப்பாறி, அதை விருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகை நாளாக்கினார்கள்; அந்த நாட்கள் 'பூரீம்; பண்டிகையின் நாட்கள்' என்று அழைக்கப்பட்டது (எஸ்தர் 9:18,21). 

'இந்து தேசம் முதல் எத்தியோப்பியா தேசம் வரைக்கும்' உள்ள நூற்றிருபத்தேழு நாடுகளை அகாஸ்வேரு என்ற அரசன் சூசான் என்னும் அரமனையிலிருந்து ஆண்டுவந்தான் என்றும், 'ஆமான் அகாஸ்வேரு ராஜாவை நோக்கி: உம்முடைய ராஜ்யத்தின் சகல நாடுகளிலுமுள்ள ஜனங்களுக்குள்ளே ஒருவித ஜனங்கள் சிதறுண்டு பரம்பியிருக்கிறார்கள்; அவர்களுடைய வழக்கங்கள் சகல ஜனங்களுடைய வழக்கங்களுக்கும் விகற்பமாயிருக்கிறது' (எஸ்தர் 3:8) என்றும் எழுதப்பட்டிருப்பதால், இந்தியாவிலும் யூதர்கள் அக்காலத்தில் வசித்திருந்திருக்க வாய்ப்புகள் உண்டல்லவா! எனவே நிச்சயம் அந்நாட்களில்,  'இந்தியாவிலும் பூரீம் என்று அழைக்கப்படும் இந்தப் பண்டிகை கொண்டாடப்பட்டிருக்கவேண்டும்.' சத்தியத்தை கரங்களில் ஏந்தியிருக்கும் சந்ததியாராகிய கிறிஸ்தவர்கள்கூட சரித்திரத்தை மறந்துவிட்டபோதிலும், யூதர்கள் பூரீம் பண்டிகையைக் கொண்டாடும் இதே நாளில், புறஜாதியினர் 'தீயவைகளின் மேல் வெற்றி பெற்ற நாளாக'  ஹோலிப் பண்டிகையை ஆசரிப்து ஆச்சரியமே! 

Comments

Popular posts from this blog

'பஸ்காவின் பலி'

  www.sinegithan.in யூதர்களது சந்திர நாட்காட்டியின்படி, ஒரு நாள், சூரியன் அஸ்தமிக்கும் சாயங்காலத்தில் தொடங்கி, மறுநாள் சூரியன் அஸ்தமிக்கும் சாயங்காலத்தில் முடிவடைகின்றது.  ' சாயங்காலமும் விடியற்காலமுமாகி , முதலாம் நாள் ஆயிற்று' (ஆதி 1:5,8,13,19,23,31) என்று ஆதியாகமத்திலும் இதனை நாம் வாசிக்கின்றோமே. 'சாயங்கால வேளை' என்பது ஒரு நாளின் தொடக்கம் என்பதினாலேயே, ஆண்டவருடைய பிரசன்னத்தில் அந்த நாளை தொடங்க, ஈசாக்கு சாயங்காலவேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்தான் (ஆதி. 24:63) என்றும் வேதத்தில் வாசிக்கின்றோமே. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையிலும் இந்த பழக்கம் இருந்ததனை நாம் வேதத்தில்  காணமுடியும்.  அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார் (மத். 14:23) என்று கூறுகின்றது வேதம்.      சாயங்காலத்தில் வேண்டுதல் செய்யும் வழக்கம் ஆபிரகாமின் ஊழியக்காரனது வாழ்க்கையில் இருந்ததினாலேயே, ஈசாக்கிற்கு பெண் பார்க்கச் சென்றுகொண்டிருந்த நேரத்திலும், 'சாயங்காலமாகிவிட்டது' என்பதை உணர்ந்த அவன், வேண்டுதல் செய்யத் தொடங

விவாகம், விவாகரத்து வேதம் சொல்லுவது என்ன?

விவாகம், விவாகரத்து  வேதம் சொல்லுவது என்ன? www.sinegithan.in விவாகரத்து செய்யலாமா?  யாரை தள்ளிவிட வேதம் அனுமதிக்கின்றது? தள்ளிவிடப்பட்டவரை விவாகம்  செய்யலாமா?  மறுமணம், வேதம் போதிப்பது என்ன?  இன்றைய உலகத்தை ஆனந்தத்திற்குள்ளும், அழுகைக்குள்ளும் இழுத்துச்செல்லும் இரண்டு சொற்கள் இவைகள். உருவாகும்போது 'விவாகம்' என்றும் உருக்குலையும்போது 'விவாகரத்து' என்றும் வெவ்வேறு வார்த்தைகளால் உலகம் இவைகளை பிரித்துச் சொல்லி விவரித்தாலும்; வேதத்தின் வெளிச்சத்தில், சத்தியம் என்னும் சட்டத்தின் கீழ் இவ்விரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள விளக்கத்தை நாம் அறிந்துகொண்டால், தந்திரமாக இவ்வுலகத்தில் கிரியைசெய்துகொண்டிருக்கும் சத்துருவின் அந்தகாரத்திற்குள் நம்முடைய வாழ்க்கையும் அகப்பட்டுக்கொள்ளாமல் தப்பித்துக்கொள்ள முடியும்.  தேவனும் மனிதனும் அவ்வாறே, மனிதனும் மனிதனும் இணைந்து மகிழ்ச்சியுடன் வாழ்வதையும், சந்தோஷமாக நடைபோடுவதையும் சற்றாகிலும் விரும்பாதவன் சாத்தான்; தேவனை விட்டு மனிதன் பிரிந்து வாழ்வதை மாத்திரமல்ல, மனிதனை விட்டும் மனிதன் பிரிந்துவாழவேண்டும் என்று பிரிவினையின் சுவராக விரும்புகின்றவன்

பஸ்காவா? ஈஸ்டரா?

சத்தியம் சொல்லும்  சரித்திரம் www.sinegithan.in பஸ்காவா? ஈஸ்டரா?         இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுள் 'யூதாஸ்' என்ற ஒருவனை எப்படியாகிலும் சாத்தான் தன்னகப்படுத்திக்கொண்டு, தான் விரும்பும்  காரியத்தைச் சாதிக்க விழைந்தது போல, இன்றும் சிலரையோ அல்லது சிலவற்றையோ தன்னகப்படுத்தி, தேவ ஜனங்களை திசைமாற்ற நினைக்கின்றான் சத்துரு. சத்தியத்திலிருந்து தேவ ஜனம் சறுக்கி விழுவதுதானே சத்துருவுக்கு சந்தோஷமான செய்தி; அத்தகைய செய்தியையே தினமும் கேட்டு காதுகுளிரவேண்டும் எனக் காத்திருக்கின்றான். இந்த கடைசி காலங்களில், வேகமாகச் செயல்படும் சத்துருவின் விவேகத்தை உணர்ந்துகொள்ளாமல், அவனது வலைக்குள் விழுந்தவர்களாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் மக்களுள் தேவ ஜனங்களில் சிலரும் அடக்கம் என்பது வேதனையான செய்திதான். உண்மையும் உத்தமமுமாய் ஓடிக்கொண்டிருக்கும் கர்த்தருடைய ஊழியர்களின் மத்தியில், கள்ளத் தீர்க்கதரிசிகளையும் மற்றும் கள்ளப் போதகர்களையும் நுழைத்துவிடுகின்றான். 'ஆண்டவருக்கே ஆராதனை' என்ற அடிப்படைச் சத்தியத்தை மறக்கச்செய்து, 'ஜனங்கள் ஆனந்தமாயிருக்கவே ஆராதனை' என்ற நினைவை நோக்கி நடக்கச்செய்க