கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரருக்கு,
இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். சமீபத்தில் நடைபெற்ற ஒரு வாலிபர் கூடுகையில் ஊழிய அழைப்பினை நான் பெற்றிருக்கிறேன்; அதில் முன்னேறிச் செல்வது எப்படி?
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரனுக்கு,
இரட்சகரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். கர்த்தருடைய ஊழியத்திற்கென்று, கர்த்தரால் நீங்கள் தெரிந்து கொள்ளப்பட்டு, அழைப்பு பெற்றமைக்காக ஆண்டவருக்கு நன்றியையும், அத்துடன் அத்துடன் உங்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, சில ஆலோசனைகளை உங்கள் முன் வைக்க விரும்புகின்றேன்.
இயேசு கிறிஸ்துவை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு, பாவ மன்னிப்பினைப் பெற்று, இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்ற அனைவரும் ஊழியம் செய்ய அழைக்கப்பட்டவர்களே! இயேசு கிறிஸ்துவைப் பற்றியும், அவர் அருளும் இரட்சிப்பைப் பற்றியும் சக மனிதர்களுக்குச் சாட்சியாக அறிவிக்க வேண்டிய அழைப்பு இரட்சிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் உண்டு; இதில் எவ்விதத் தளர்வும் விலக்கும் இல்லை. என்றபோதிலும், குறிப்பிட்ட சில பணிகளுக்காக, பிரத்தியேகமாகச் சிலரை தேவன் தனக்கெனத் தெரிந்து கொள்வதுண்டு. நீங்கள் அப்படிப்பட்டவர்களுள் ஒருவராக ஒருவேளை இருக்கக்கூடும் என நான் நம்பி கீழ்க்கண்ட சில ஆலோசனைகளை உங்களுக்கு எழுதுகிறேன்.
இப்படிப்பட்ட அழைப்பினை ஒருவேளை நீங்கள் பெற்றிருப்பீர்கள் என்றால், முதலாவதாக, தேவன் உங்களை எதற்காக அழைத்திருக்கிறார் என்பதை அறிந்துகொள்வதும், அதிலேயே உங்களை உறுதிப்படுத்திக் கொள்வதும்தான் முதற்பணி; அது உங்களை ஊழியத்தில் அஸ்திபாரமிடவும், எதிர்காலத்தில் ஊன்றக் கட்டிக் கொள்வதற்கும் மிகுந்த உறுதுணையாயிருக்கும். உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கின்ற வாக்குத்தத்தங்களிலிருந்தும், உங்களது தாஷந்துகள் மற்றும் அத்துடன் அருளப்பட்டிருக்கும் வரங்களை மையமாகக் கொண்டும், மற்றும் உங்கள் உள்ளத்தில் தேவன் அருளும் பாருங்கள் மற்றும் விருப்பங்களை மையமாகக் கொண்டும் உங்கள் அழைப்பின் ஆரம்பப் பயணம் தொடங்கக் கூடும். அஸ்திபாரம் இடும் பணி உங்களுடையதுதான்; மற்றவர்கள் உங்களுக்கு உதவி செய்யலாம். உங்களது அழைப்பை உறுதிப்படுத்த வாய்ப்பளிக்கும் ஊழியத்தோடு அல்லது ஊழியரோடு இணைந்து நீங்கள் செயல்படவும் தொடங்கலாம். ஒருவேளை, அந்த ஊழியமோ அல்லது ஊழியரோ உங்களது அழைப்பிற்கு ஏற்றதாகக் காணப்பட்டால், உங்கள் ஓட்டத்தை அவர்களோடு கூடத் தொடர்வதில் தடை ஏதும் இல்லை. இல்லையெனில், அவர்களோடு சில காலம் ஊழியத்திற்கான ஆலோசனைகளையும் மற்றும் பயிற்சியையும் பெற்றறிந்து, திடமானதைத் தொடர்ந்து, நீங்கள் உங்கள் ஊழியத்தை தேவன் அருளியது போலத் தனியாகத் தொடர்வதிலும் தவறு ஏதுமில்லை. அழைப்பிலிருந்து மாத்திரம் திசை திரும்பி விடாதபடிக்கு கவனமாய் இருங்கள்; ஏனெனில், அது உங்களை முடிவில் திருப்தியற்றவர்களாக மாற்றி வடும். கூடுமான மட்டும் தனியாக ஓடாமல் குழுவாக ஓட முயற்சிப்பது, உங்களுக்கு ஊழியத்தின் பாதையில் உற்சாகத்தை கொடுக்கும்; சோர்புறும் நேரங்களில் உங்களை ஆறுதல்படுத்தும். உங்கள் பலனை அதிகரிக்கச் செய்யும்; தேவ வல்லமையும் அதிகமதிகமாய் வெளிப்படும். எனவே, உங்கள் தரிசனத்திற்கு இணக்கமுடையோர் இருப்பின், அவர்களையும் உடன் பணியாளர்களாகச் சேர்த்துக் கொள்வது நல்லது. கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வாராக!
கருத்துகள்
கருத்துரையிடுக