கிறிஸ்துவுக்குள் அன்பான அண்ணனுக்கு,
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். குழு ஊழியத்தைப் பற்றி கேள்வி பதிலில் பகுதியில் நீங்கள் எழுதியிருந்ததை வாசித்தேன்; மிகவும் பிரயோஜனமாக இருந்தது. தற்பொழுது சக சகோதரர்களோடு இணைந்து, சிறுசிறு ஊழியங்களைச் செய்யத் தொடங்கியுள்ளேன். குழு ஊழியத்தில் நான் கடைபடிக்கவேண்டிய, அல்லது பின்பற்ற வேண்டிய பிற ஆலோசனைகள் ஏதாகிலும் உண்டா?
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரனுக்கு,
ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். உங்களது தொடர் உரையாடுதல்களுக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறேன். உங்களது கேள்வியை வாசித்ததும், உடனே என் இதயத்தில் தேவன் கொடுத்த சில ஆலோசனைகளை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். தேவன், உங்கள் வாழ்க்கைக்கு அவைகளை பயனுள்ளவைகளாக மாற்றித் தருவாராக.
ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும். ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே. இரண்டுபேராய்ப் படுத்துக்கொண்டிருந்தால் அவர்களுக்குச் சூடுண்டாகும்; ஒண்டியாயிருக்கிறவனுக்குச் சூடுண்டாவது எப்படி? ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்து நிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது (பிரசங்கி 4:9-12) என்பவை, சாலமோன் மூலமாக தேவன் நமக்கு எழுதித் தந்திருக்கிற வார்த்தைகள்.
இந்த வசனங்களில் "பலனுண்டாகும்" "தூக்கிவிடுவான்" "சூடுண்டாகும்" "எதிர்த்து நிற்கலாம்" "முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது" போன்ற வார்த்தைகளை கவனத்தில் கொள்ள உங்களை ஞாபகப்படுத்துகிறேன்.
உங்களில் ஐந்துபேர் நூறுபேரைத் துரத்துவார்கள்; உங்களில் நூறுபேர் பதினாயிரம்பேரைத் துரத்துவார்கள்; உங்கள் சத்துருக்கள் உங்களுக்கு முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள் (லேவி. 26:8), அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும், கர்த்தர் அவர்களை ஒப்புக்கொடாமலும் இருந்தாரானால், ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்தி, இரண்டுபேர் பதினாயிரம்பேரை ஓட்டுவதெப்படி? (உமா. 32:30) போன்ற வசனங்கள் குழு ஊழியத்தினால் உண்டாகும் முழு பலனையும் வெளிக்காட்டுகின்றது. ஆம், இயேசு கிறிஸ்து சீஷர்களை இரண்டு இரண்டு பேராக அனுப்பினதற்கும் காரணம் இதுவே. "சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம்" என்று (1சாமு. 18:7) என்று ஸ்திரீகள் பாடினது, தேவனுடைய துணையோடு அது சாத்தியமே என்பதை வெளிப்படுத்தின போதிலும், தேவனோடு இருக்கும் இரண்டு பேர்களைக் கொண்டும் தேவன் அதனைச் செய்து முடிக்கமுடியும் என்பது வேதம் நமக்குக் கற்றுத் தரும் பாடம்.
இரண்டாவதாக, ஊழியத்தின் ஓட்டத்தில் உண்டாகும் இடையூறுகளைக் கண்டு இளைத்துப் போகும் சூழ்நிலை வாழ்க்கையில் உண்டாகும்போது, பல்வேறு போராட்டங்களை கண்டு நாம் சோர்ந்து போகும்போது, தனியொரு மனிதனாக அதனைத் தாங்கும் பெலனுக்காகப் போராடுகையில், தேவன் நமக்கு உதவி செய்வது நிச்சயமே (சங். 37:24; நீதி. 24:16). என்ற போதிலும், உடனிருக்கும் உடனாளியின் மூலமாகவும் உதவி நம்மைத் தேடி வரும் என்பது வேதம் நமக்கு கற்றுத் தரும் பாடம்.
மூன்றாவதாக, ஆவிக்குரிய வாழ்க்கையில் அல்லது ஊழியத்தின் பாதையில், உற்சாகப்படுத்தவும் அனல்மூட்டிக்கொள்ளவும் ஒருவருடைய உதவி மற்றவருக்குத் தேவை; இதனை நாம் மறுக்கவோ அல்லது மறக்கவோ கூடாது. இதன் உள்ளான அர்த்தம், "ஒருவருடைய ஆவிக்குரிய வாழ்க்கை மற்றவருக்கு பயனுள்ளதாக அனல் உள்ளதாக இருக்கவேண்டும் என்பதே". இல்லையென்றால், ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டு விடும் நிலைக்கும், அனலற்ற குளிர்ந்து போன நிலைக்கும் நாம் தள்ளப்பட்டு விடக்கூடும். பக்கத்தில் ஒரு கட்டை மில் நெருப்பு எரிந்து கொண்டேயிருந்தால், அனைவருக்கும் விறகிலும் அனல் பற்றிக்கொள்ளும். இந்த வாய்ப்பினை, குழு ஊழியங்கள் மாத்திரமே நமக்குக் கொடுக்க முடியும்.
நான்காவதாக, நம்மை மேற்கொள்ள வரும் சத்துருக்களோடு எதிர்த்து நிற்கவும் நமக்கு பலன் கிடைக்கும். ஊழியத்தின் பாதையில் முன்னேறிச் செல்லும்போது, தடைகளை எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் அநேக இடங்களில் உண்டாகக்கூடும். அத்தகைய நேரங்களில், பின்னிட்டுத் திரும்புவதா? முன்னேறிச் செல்வரா? அல்லது சத்துருக்களை எதிர்ப்பதா? போன்ற பல தரப்பட்ட கேள்விகள் நமது உள்ளத்தில் உண்டாகக்கூடும். எது எப்படி ஆயினும், தடைகளைக் கண்டு திரும்பிச் செல்ல அழைக்கப்பட்டவர்கள் அல்ல நாம்; முன்னேறிச் செல்லவே அழைக்கப் பட்டவர்கள். எனவே, முழங்காலில் யுத்தம் செய்து சத்துருவை எதிர்த்து நிற்க, குழுவாக இணைந்து நிற்போமென்றால், நிச்சயம் அது வெற்றியைத் தேடித் தரும்.
இறுதியாக, சக ஊழியர்களுடனோ, அல்லது குழு உடனோ உங்களை இணைக்கும் சக்தியாக, அதாவது முப்புரி நூலாக தேவனே இருக்க வேண்டும் என்பது வேதத்தின் மூலமாக தேவன் எழுதி தந்திருக்கும் தெளிவான ஆலோசனை. தேவனாகிய நூலை விட்டு விட்டு, வேறு எந்த காரணத்தை முன்னிறுத்தியும் உங்களது இணைப்பை அல்லது உறவை வலுப்படுத்த முயற்சிக்கவேண்டாம்.
அன்பாற சகோதரனே, மேற்கண்ட வசனத்தின் அடிப்படையிலான ஆலோசனை, உங்களது தற்போதைய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்று ஆண்டவருக்குள் நம்புகிறேன். தேவன் உங்களுக்கு உதவி செய்வாராக!
.
கருத்துகள்
கருத்துரையிடுக